பேத்தி வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்..! போக்சோவில் அதிரடி கைது..!
கோவை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது சிறுமியான இவர் அந்த பகுதியில் இருக்கும் மாநகராட்சிப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜு(60). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார்.
சிறுமி பானு பள்ளிக்கு தினமும் நடந்து சென்று வருவார் என்று தெரிகிறது. அப்போது முதியவர் ராஜு சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். தினமும் தொந்தரவு செய்த அவர், ஒரு கட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. சிறுமியி மிரட்டவும் செய்துள்ளார். இதனால் பயந்து போன பானு யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். பின் மீண்டும் ராஜு தொல்லை கொடுக்கவே தனது வகுப்பு ஆசிரியரிடம் சிறுமி கூறியிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழிவகை செய்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோவை மகளிர் போலீசார், முதியவர் ராஜூவை போக்ஸோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கிறார். ராஜுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
13 வயது சிறுமிக்கு 60 வயது முதியவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.