கீழே கிடந்த 80 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த வழக்கறிஞருக்கு குவியும் பாராட்டுகள்.!!
மதுரை அண்ணாநகர் பகுதியில் சாலையில் கிடந்த ரூ.80,000 பணத்தை போலீஸில் ஒப்படைத்த வழக்கறிஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
T.Balamurukan
மதுரை அண்ணாநகர் பகுதியில் சாலையில் கிடந்த ரூ.80,000 பணத்தை போலீஸில் ஒப்படைத்த வழக்கறிஞருக்கு மதுரை மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துக்குமார். இவர்,சமூக ஆர்வலரும் கூட, மதுரை மாநகராட்சியில் காணாமல் போன மரகதலிங்கம், டிக்டாக் என பல்வேறு பொதுநல வழக்குகளை தொடர்ந்து வருகிறார். இவர் காந்தி மியூசியம் ரோட்டில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பை ஒன்று நடுரோட்டில் கிடந்தது. அந்தப் பையைக் எடுத்து அவர் பார்த்த போது அதில் வங்கி காசோலைகள், ரசீதுகள் மற்றும் ரொக்கப் பணம் இருப்பது தெரிந்தது. பக்கத்திலுள்ள கடைக்காரர்களிடம் இது பற்றி விசாரித்தபோதும், அது யாருடையது என்பது தெரியவில்லை.
அதன்பிறகு, அண்ணாநகர் காவல் நிலையத்தில் அந்த பணப் பையை ஒப்படைத்தார். அந்தப் பையில் ரூ.80,000 ரொக்கப்பணம் இருந்தது.பணத்தை தவறவிட்ட நபர் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். பணத்தை ஒப்படைத்த வழக்கறிஞர் முத்துகுமாரின் நேர்மையை போலீஸார் பாராட்டினர்.