என்னய்யா.. சியான் பையனுக்கு வந்த சோதனை...! தள்ளிப்போகும் ஆதித்ய வர்மா ரிலீஸ்...!
“சியான்“ விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'ஆதித்ய வர்மா'. தெலுங்கில் வெளியாகி பட்டைய கிளப்பிய சூப்பர் ஹிட்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதில், துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார்.
பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா, ஆதித்ய வர்மா மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, 'அர்ஜூன் ரெட்டி' புகழ் ரதான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே, 'ஆதித்ய வர்மா' படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கேற்றார்போல், துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக பங்கேற்றனர். ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, வரும் நவம்பர் 21-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு காரணம், தணிக்கை சான்றிதழ்தானாம். சென்சார் போர்டுக்கு சென்றுள்ள ஆதித்ய வர்மா படத்திற்கு அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனராம். ஆனால் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு, 'யு/ஏ' வாங்க கடுமையாக மெனக்கெட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தப் படம் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற தலைப்பில் உருவானது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்திற்குத் திருப்தி தராததால் 'வர்மா' கைவிடப்பட்டது. அதன் பிறகு, கிரிசாயாவை வைத்து 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் மீண்டும் புதிதாக எடுக்கப்பட்டது.
ஆனால், இந்தப் படமும் ஏதோ காரணங்களால் ரிலீசாகாமல் தள்ளிபோகியுள்ளது. இதனை அறிந்த துருவ் ரசிகர்கள், முதல் படத்திலே ஒரு நடிகருக்கு இத்தனை பிரச்சனையா.. ரொம்ப பாவம் என கவலை அடைந்துள்ளனர்.