'பிகில்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, 'தளபதி' விஜய் நடித்து வரும் படம் 'தளபதி-64'. இந்தப் படத்தை, 'மாநகரம்', 'கைதி' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே 'தளபதி-64' படம், முற்றிலும் வேறுபட்ட வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறதாம்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது 2-ம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில், ஹீரோயின் மாளவிகா மேகனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. மேலும், சாந்தனு, '96' புகழ் கவுரி கிஷான், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களின் காட்சிகளும் படமாக்கப்படுகிறது.

டெல்லி படப்பிடிப்பிலேயே விஜய்சேதுபதி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழுவுடன் அவர் இணையாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்த வேளையில், 'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பின்போது விஜய்-விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படப்பிடிப்பில் மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸும் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

'தளபதி 64' படத்தில் கல்லூரிப் பேராசிரியராகவும், நாட்டில் கல்வித்துறையில் நடைபெறும் மிகப்பெரிய ஊழலுக்கு எதிராக போராடுவராகவும் விஜய் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை 2020 புத்தாண்டு தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய், விஜய்சேதுபதி என இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்துள்ளதால் தளபதி-64 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
