அடேங்கப்பா 700 கோடியா...! கிடுக்குப் பிடி போட்ட அதிகாரிகள்..!
தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 700 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் மதுபான உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆறாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அந்த ஆலைக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் இறங்கினர்.
குறிப்பாகசென்னை, கோவை, தஞ்சை, காரைக்குடி என 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது அதில் தஞ்சாவூரில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
அத்துடன் மற்றொரு ஆலைக்கு மதுபானம் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கப்பட்டதில் சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்ததற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக தகவல் அளித்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் இன்னும் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை முறையாகத் தணிக்கை செய்து மதுபான ஆலை உரிமையாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.