தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை... மளிகைப்பொருட்களுடன் மரியாதையையும் சேர்த்து கொடுத்த விஜய் ரசிகர்கள்...!
நாட்டு மக்களின் உயிரை காக்க தங்களை பணயம் வைத்து பாடும் தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக திருவண்ணாமலையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் பாதபூஜை செய்துள்ளனர்.
கொரோனாவின் பிடியில் சிக்கி ஒட்டுமொத்த சினிமாத்துறையும் சின்னாபின்னமாகி வருகிறது. நம்மையே நம்பி வாழும் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு வேலை அரிசி கஞ்சி கொடுக்கவாவது உதவுக்கரம் நீட்டுங்கள் என்று பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம் ரவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தயாரிப்பாளர் தாணு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நிதி தங்களால் இயன்ற உதவிகளை வழங்கினார்.
கொரோனா குறித்து நீண்ட நாட்களாக வாய் திறக்காமல் இருந்த தல அஜித் கூட மத்திய அரசு நிவாரண நிதிக்கு 50 லட்சம், மாநில அரசு நிவாரண நிதிக்கு 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க 25 லட்சம் என ஒரே நாளில் ரூ.1.25 கோடி நிதி அளித்து சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆகிவிட்டார். ஆனால் தளபதி விஜய்யோ இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்க மனசில்லாமல் இருப்பது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இந்த சமயத்தில் எங்க தளபதி கொடுக்கலைன்னா என்ன நாங்க இருக்கோம் என்ற ரீதியில் அவரது ரசிகர்கள் தீயாய் சேவை செய்து வருகின்றனர். மக்களுக்கு காய்கறி, அரிசி மூட்டை வழங்குவது, நமக்காக சேவையாற்றும் காவலர்களுக்கு உணவளிப்பது, தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க் உடன் சேர்ந்து ஒரு மாத மளிகை பொருட்களையும் வழங்குவது என தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட தளபதி மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம் மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கு அடுத்ததாக தங்களது உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கியிருப்பது தூய்மை பணியாளர்கள் தான். முதலில் அங்கீகாரம் மறுக்கப்பட்டாலும், தூய்மை பணியாளர்களின் உன்னத சேவையை புரிந்துகொண்ட மக்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நாட்டு மக்களின் உயிரை காக்க தங்களை பணயம் வைத்து பாடும் தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக திருவண்ணாமலையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் பாதபூஜை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களது குடும்பத்திற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கி மனதோடு சேர்த்து, வயிறையும் குளிர வைத்துள்ளனர்.
பணத்தை விட உயிர் காக்க உதவும் மனிதர்களே முக்கியம் என்பதை பறைசாற்றும் விதமாக தூய்மை பணியாளர்களுக்கு பண மாலை அணிவித்து காலில் விழுந்து மரியாதை செலுத்தினர்.