தமிழக அரசு கூட பரிசு அறிவிக்கல…. ஆனா தங்க மங்கைக்கு முதல் ஆளா ரோபோ சங்கர் 1 லட்சம் பரிசு !!
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர் ஒரு இலட்சம் ரூபாய் அன்புப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார்
இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் இவருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு இன்னும் வெளியாகத நிலையில், முதல் ஆளாக நடிகர் ரோபோ சங்கர் வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோபோ சங்கர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இவருடைய வெற்றி பலருக்கும் உத்வேகம் அளிக்கும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே காஷ்மீரில் நடந்த புல்வமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மற்றும் தூத்துக்குடி ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி தலா ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது