ராஜ ராஜ சோழன் குறித்த சர்ச்சைப் பேச்சு !! இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு !!
மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து கும்பகோணம் அருகே அவதூறாகப் பேசியதாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ய்யபட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர்பாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், மன்னர் ராஜ ராஜ சோழனை அவன் இவன் என ஏக வசனத்தில் பேசினார் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அவருடைய ஆட்சி காலம் இருண்ட காலம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ராஜராஜசோழனைப் பற்றி அவதூறாகப் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்திலும், இளைஞர்கள் மனதில் தீய எண்ணத்தை விதைக்கும் வகையிலும் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து , ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் பாலா புகார் அளித்தார்.
இந்நிலையில் ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் கவிதா தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பேசியது), 153(ஏ), (1) (எ) (பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.