பிரபல இசைக்குழு உரிமையாளர் தற்கொலை..!
லக்ஷ்மன் இசைக்குழு உரிமையாளர் ராமன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
லக்ஷ்மன் சுருதி, தமிழகத்தின் பிரபலமான இசைக்குழுக்களுள் ஒன்றாகும். பல்வேறு இடங்களில் இசைக்கச்சேரிகள் நடத்தி வருகின்றனர். இதன் நிறுவனர் ராமன். சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார். சென்னை காமராஜ் அரங்கத்தில் நேற்று லக்ஷ்மன் சுருதி குழுவினரின் இசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அதில் ராமன் கலந்து கொண்டு கச்சேரியை நடத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென பாதியிலே கச்சேரியில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லக்ஷ்மன் இசைக்குழு உரிமையாளர் ராமனின் தற்கொலை அவரது குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.