"பில்கேட்ஸ்கிட்ட நான் பேசிட்டேன்! ஆனால்..." - வித்தியாசமான கேரக்டரில் அசரடிக்கும் விஜய்சேதுபதி! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த கடைசி விவசாயி படத்தின் டிரைலர்!...
'சங்கத்தமிழன்' படத்தை தொடர்ந்து, மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடைசி விவசாயி'. இந்தப் படத்தை, 'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார்.
அத்துடன், அவரே ஒளிப்பதிவு செய்து படத்தையும் தயாரித்துள்ளார். அவருடன் விஜய்சேதுபதி, சமீர் பரத்ராம் ஆகியோரும் இணைந்து 'கடைசி விவசாயி' படத்தை தயாரித்துள்ளனர்.
அழிந்து வரும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் தற்போதைய பிரச்னைகளையும், அவர்களின் வாழ்வியலையும் மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
'ஆண்டவன் கட்டளை' படத்தில் ஸ்மார்ட் பாயாக நடித்திருந்த விஜய்சேதுபதி, 'கடைசி விவசாயி' படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் மனநலம் பாதித்தவராக நடித்துள்ளார்.
யானை பாகனாக காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். 'ஆண்டவன் கட்டளை' படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி - யோகிபாபு மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ஹீரோ விஜய்சேதுபதி என்றாலும், கதையின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்தப் படம் தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது கடைசி விவசாயி படத்தின் டிரைலரை வெளியிட்டு அசரடித்துள்ளது படக்குழு.
இளைஞராஜாவின் கிராமிய பின்னணி இசையுடன் தொடங்கும் டிரைலரில், "பில்கேட்ஸ்கிட்ட பேசுனியாப்பா?" என ஒருவர் கேட்க "நான் பேசிட்டேன் அவர்தான் என்கிட்ட பேசல" என சரவெடி கவுண்டர்களால் விஜய்சேதுபதி அசரடிக்க, மரபுமாற்று விதை தொடர்பாக பெரியவர் நல்லாண்டி பேசியுள்ள வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மொத்தத்தில், விவசாயம் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைமையை சொல்லவருகிறான் 'கடைசி விவசாயி' என்பதை உறுதிப்பட அசத்தலாக சொல்லியிருக்கும் இந்த டிரைலர், சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன், படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.