பிரபல நடிகர் துனியா விஜய் கைது...!
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக பிரபல கன்னட நடிகர் துனியா விஜய், பெங்களூரு போலீசாரால் கோவை அருகே கைது செய்யப்பட்டார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இதுதொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர் சுந்தருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு விரைந்தனர்.
சுந்தரின் வீட்டில் கன்னட நடிகர் துனியா விஜய் இருந்துள்ளார். அப்போது, காவல்துறையினரை திசைதிருப்பும் நோக்கில் அவர்களுடன் பேச்சு கொடுத்து சம்பவ இடத்தில் இருந்த சுந்தரை தப்பிக்க விட்டார். இது தொடர்பாக துனியா விஜயிடம் விசாரித்தபோது சுந்தரை தான் பிடித்து கொடுப்பதாக போலீசிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், பிடித்து கொடுக்காமல் துனியா விஜய்யும் தலைமறைவானார். இந்நிலையில் பெங்களூரு போலீசார் துனியா விஜய் மீது காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனர். சுமார் 5 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த துனியா விஜயை பெங்களூரு போலீசார் நேற்றிரவு கோவை அருகே வைத்து கைது செய்துள்ளனர்.