51 லட்சம் ரூபாய்… 6 பெட்டிகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைகள்… கேரள மக்களுக்கு அனுப்பி வைத்த அமிதாப் பச்சன் !!
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 51 லட்சம் ரூபாய் நிதியுதவியும், 6 பெட்டிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய உடைகளையும் அனுப்பி வைத்துள்ளார்.
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தால் அந்த மாநிலமே வெள்ளத்தல் மூழ்கிப் போனது. 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சாலைகள் வெள்ள அரிப்பால் துண்டிக்கப்பட்டு உள்ளது. தற்போதுதான் அங்கு இயல்பு வாழ்க்கை கொஞ்சம், கொஞ்சமாக திரும்பி வருகிறது.
இந்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய 2,500 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று அரசு மதிப்பிட்டு உள்ளது. மேலும் 20 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தற்போது மழை வெள்ளம் வடிந்து நிவாரண பணிகள் மின்னல் வேகத்தில் நடக்கின்றன. நிவாரண உதவிகளும் குவிந்து வருகிறது. நடிகர் நடிகைகள் நிதி வழங்குகிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், பிரபு, லாரன்ஸ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா பட நிறுவனமும் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் ரூ.1 கோடி வழங்கி உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிகின்றன.
இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கி வைத்திருந்த புதிய உடைகளை 6 பெட்டிகளில் அடைத்து கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் ரசூல் பூக்குட்டியிடம் சேரும்படி அவற்றை அனுப்பி இருக்கிறார். அந்த பெட்டிகளில் விலை உயர்ந்த 25 பேண்ட்கள், 20 சட்டைகள், 80 ஜாக்கெட்கள், 40 ஷூக்கள் போன்றவை உள்ளன. அத்துடன் ரூ.51 லட்சம் நிவாரண நிதியும் அனுப்பி உள்ளார்.
இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, வித்யாபாலன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரும் வெள்ள நிதி வழங்கி உள்ளனர்.