என்னை பெரிய ஆளாக்க வேண்டாம் பாக்ஸர் அங்கிள்... அமைச்சர் ஜெயக்குமாரை தாறுமாறாக விமர்சித்த நடிகர் சித்தார்த்!
“எனக்கான இடத்தை நான் நேர்மையாக உழைத்து பெற்றுள்ளேன் பாக்ஸர் அங்கிள். விளம்பரத்துக்காகப் பேசவேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க தேவையில்லை. உங்கள் வேலையைப் பாருங்கள். அதுவே போதும்” என சித்தார்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.
நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க தேவையில்லை. உங்கள் வேலையைப் பாருங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமாரை நடிகர் சித்தார்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து ட்விட்டரில் விமர்சனம் செய்தார் நடிகர் சித்தார்த். அதில், “எடப்பாடி பழனிசாமி எனது மாநிலத்துக்கும் என் மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பதை வெட்கக்கேடாக உணர்கிறேன். குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அவரது சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. இவற்றுக்கெல்லாம் நீங்கள் பதிலளித்தாக வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதைப் பற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் சித்தார்த் ட்வீட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,“சித்தார்த்தா..? அவர் எந்தப் படத்தில் நடித்திருக்கிறார்? விளம்பரத்துக்காகச் சிலர் இப்படியெல்லாம் கேள்விகளை முன்வைப்பார்கள். அவர்களை பெரிய ஆளாக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மீண்டும் பதிலளித்துள்ளார். அதில், “அவர் (ஜெயக்குமார்) நான் யார் என்று கேட்கிறார். பரவாயில்லை. அவருடைய அரசுதான் எனக்கு 2014-ம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை 2017-ம் ஆண்டு அறிவித்தது. அது இதுவரை என் கையில் தரப்படவில்லை.” என்று சித்தார்த் தெரிவித்திருந்தார்.
இரண்டாவதாக சித்தார்த் வெளியிட்ட இன்னொரு ட்விட்டரில், “எனக்கான இடத்தை நான் நேர்மையாக உழைத்து பெற்றுள்ளேன் பாக்ஸர் அங்கிள். விளம்பரத்துக்காகப் பேசவேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க தேவையில்லை. உங்கள் வேலையைப் பாருங்கள். அதுவே போதும்” என சித்தார்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.