ஆண் தேவதை’ திடீரென்று ரேஸிலிருந்து பின்வாங்கியது ஏன்? இயக்குநர் கண்ணீர்!
சிறுபட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைத் தணிக்கும் செயலில் தயாரிப்பாளர் சங்கம் எப்போதுதான் இறங்கப்போகிறதோ தெரியவில்லை.
சிறுபட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைத் தணிக்கும் செயலில் தயாரிப்பாளர் சங்கம் எப்போதுதான் இறங்கப்போகிறதோ தெரியவில்லை. இன்று 5ம் தேதி ரிலீஸாவதாக இருந்த ‘ஆண் தேவதை’ படம் 20க்கும் குறைவான தியேட்டர்களே கிடைத்ததால் கடைசி நேரத்தில் ரேஸில் இருந்து பின் வாங்கிவிட்டது.
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் தாமிரா இயக்கியிருக்கும் ;ஆண் தேவதை’ படம் இன்று ரீலீஸாவதாக இருந்து, பெரும்பொருட்செலவில் விளம்பரங்களும் செய்யப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதியின் ‘96’ ராட்சசன்’ நோட்டா’ ஆகிய மூன்றுபடங்களும் அனைத்து தியேட்டர்களையும் வளைத்துவிட்டதால் ‘ஆண் தேவதைக்கு தியேட்டர்களே கிடைக்கவில்லை.
இது பற்றி குமுறிய இயக்குநர் தாமிரா, ‘இன்று ஆண் தேவதை வெளியாகி இருக்கவேண்டியது.. மீண்டும் தள்ளிப்போகிறது. ஒரு நல்ல திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நிறைந்த நம்பிக்கை இருக்கிறது. ஆயினும் இந்த நாளைக் கடப்பது கடினமாக இருக்கிறது.
காலம் என்ன கணக்கு வைத்திருக்கிறது என்று புரியவில்லை. கூண்டில் அடைபட்ட பறவை போலிருக்கிறான் ஆண் தேவதை. யார் குற்றமெனத் தெரியவில்லை. வறியவன் தோளில் ஏறி வலியவன் வானம் தொடுவது எங்கும் தவிர்க்க இயலாத வர்க்க பேதம் தான். இங்கும் அதுவே நிகழ்கிறது. தோல்விப் படங்கள் அரங்கில் குடி கொண்டிருக்கிறது.நல்ல திரைப்படங்களுக்கு அரங்கங்கள் கிடைப்பதில்லை’என்கிறார்.