ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவது ஏன்..? மத்திய அமைச்சர் விளக்கம்
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காவிட்டால் அதனை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இது குறித்து பேசிய ஹர்தீப் சிங் பூரி, ’’ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காவிட்டால், அதனை நடத்துவதற்கு எங்கிருந்து நிதி கிடைக்கும்? தற்போது ஏர்இந்தியா வசம் அதிக மதிப்புடைய சொத்துக்கள் இருக்கிறது. அதனை வாங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் ஆர்வமுடன் முன்வருவார்கள். ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவதால் ஊழியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலிலேயே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்தார்.
சுமார் ரூ.58 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பெரும்பான்மை பங்குகளை மட்டும் விற்பதென கடந்த ஆண்டு முடிவு செய்தது மத்திய அரசு. ஆனால், யாரும் முன்வராத காரணத்தால் அனைத்து பங்குகளையும் விற்க மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்ப்பட உள்ளதாக விமானத்துறை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.