கரூர் பள்ளியின் சூரியகிரகண திருவிழா..3000 பேர் ஒரே நேரத்தில் கண்டு ரசித்த வீடியோ..!

Dec 27, 2019, 2:23 PM IST

கரூர் பரணிபார்க் கல்விக் குழுமமும், பாரத சாரண சாரணியர் இயக்கம் - பரணிபார்க் சாரணர் மாவட்டமும் இணைந்து சூரிய கிரகண வானியல் திருவிழாவை இன்று கரூர் பரணிபார்க் கல்வி வளாகத்தில் கொண்டாடினர். பரணிபார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் முனைவர். ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பரணி கல்வி குழும தாளாளர் எஸ். மோகனரங்கன் செயலர் பத்மாவதி மோகனரங்கன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

காலை 8 மணி முதலே மாணவர்களும், பரணி சாரணர் இயக்க அறிவியல் ஆர்வலர்களும் சூரிய கிரகண வானியல் நிகழ்வை கண்டு களிப்பதற்காக பள்ளி வளாகத்தில் அணி அணியாக குவிய தொடங்கினர். அனைவருக்கும் இன்று நடைபெறும் முழு சூரிய கிரகணம் நிகழ்வின் வானியல் மற்றும் அறிவியல் முக்கியத்துவத்தை முனைவர்.

ராமசுப்பிரமணியன் விளக்கிக் கூறினார். பின்னர் சூரிய கண்ணாடிகள் உதவியுடன் அனைவரும் சூரிய கிரகணத்தை கண்டு ஆய்வு செய்தனர். அறிவியல் ரீதியாகவும், பள்ளி புத்தகங்களில் உள்ள அறிவியல் பாடங்களை தொடர்புபடுத்தியும் சூரிய கிரகண நிகழ்வை மாணவர்களும், ஆசிரியர்களும் சாரணர் இயக்க அறிவியல் ஆர்வலர்களும் விவாதித்து தெரிந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பரணி பார்க் கல்வி குழுமத்தைச் சேர்ந்த சுமார் 2500 மாணவ மாணவியர் மற்றும் பரணிபார்க் சாரணர் மாவட்டத்தைச் சேர்ந்த 200 சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, பரணிபார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், பள்ளியின் பெற்றோர்கள், பொதுமக்கள் மொத்தம் 3000 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.