புதர் மறைவிலிருந்து தாக்கிய கரடி.. உயிருக்குப் போராடும் விவசாயி..! வீடியோ

Aug 6, 2019, 12:53 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவளக்குட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான  இவர் இன்று காலை பரபெட்டா பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர்மறைவில் இருந்த கரடி திடீரென ஆறுமுகத்தை தாக்கியது.

கரடியின் பிடியில் இருந்து தப்பமுடியாமல் போராடிய ஆறுமுகத்தை கரடி கட்டிப்பிடித்து  முகத்தை கடித்துக்குதறியது. ஆறுமுகத்தின் அலறல் சப்தம் கேட்ட அவ்வழியாக சென்ற கிராமமக்கள் ஒன்று திரண்டு சப்தம் போட்டனர். இதனால் கரடி ஆறுமுகத்தை விட்டுவிட்டு தப்பியோடியது.

முகம் சிதைந்த நிலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

கடம்பூர் மலைப்பகுதியில் கரடி தாக்கி விவசாயி படுகாயமடைந்ததால் மலைகிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கடம்பூர் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.