நீலகிரியில் சர்வ சாதாரணமாக உலா வரும் கரடி; வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

Sep 1, 2023, 3:57 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் போதே எவ்வித அச்சமும் இன்றி உலா வரத்தொடங்கிய உள்ளது.

இந்த நிலையில் கோத்தகிரி நகரின் முக்கிய மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ரோஸ் காட்டேஜ் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பினுள் நுழைந்த கரடி எவ்வித அச்சமும் இன்றி மாடிப்படிக்கட்டில் ஏறிச் சென்றுள்ளது. இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இந்த காட்சி குடியிருப்பு வாசிகள் மற்றும் ரோஸ் காட்டேஜ் பகுதி பொதுமக்களை அச்சமடையத் செய்துள்ளது.

எனவே வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.