டிராக்டர் - சொகுசுப் பேருந்து மோதல்! - 3மாத குழந்தை உட்பட 5 பேர் பலி! 7பேர் காயம்!

Feb 23, 2023, 12:53 PM IST

தர்மபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுக்கா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் ஆந்திர மாநிலம் வீகோட்டா கிராமத்தில் கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த எர்ரஹள்ளி கிராமம் அருகே சென்ற பொழுது சிவகாசியில் இருந்து பெங்களூர் நோக்கி வேகமாக சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்து, மல்லி, முனுசாமி, வசந்தி மற்றும் 3 மாத பெண் குழந்தை வர்ஷினி ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவேரிபட்டினம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேரை மீட்டு காவேரிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.