மல்லிகையில் மலர்ந்த பேரறிஞர் அண்ணாவின் முகம்; கோவையில் ஓவியரின் அசத்தல் முயற்சி

Feb 3, 2024, 4:47 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், திமுகவை தோற்றுவித்தவரான, பேரறிஞர் அண்ணாவின்  நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மேலை நாடுகளுக்கு இணையான கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் முன்னேறிய மாநிலமாக வருகின்றது. அதற்கான அடித்தளமிட்ட தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா என்றால் மிகையல்ல. 

சமத்துவத்தை நிலைநாட்ட அவர், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திராவிட அரசியலை ஆட்சி அரியணையில் ஏற்றிய முதல் தலைவரான அண்ணா, ஒரு தத்துவ ஞானி. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று ஒற்றுமை நல்லிணக்கத்தை போதித்த பேரறிஞர் அண்ணா, எதிர் தரப்பின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் விதத்தில், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்றார். 

இன்றளவும் நமக்கு தேவைபடும் இந்த தத்துவத்தை தந்த தத்துவ ஞானியாக போற்றப்படுகின்ற பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில், கோவையைச் சேர்ந்த ஓவியர் யு.எம்.டி. ராஜா, மல்லிகை பூவில் அண்ணாவின் ஓவியத்தை வரைந்து அசத்தி உள்ளார். மல்லிகையில் மலர்ந்த அண்ணாவின் முகம் போலவே, அவரின் தத்துவமும் மனிதர்களின் மனங்களில் வீசட்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கின்றது.