போதையில் இயக்கப்பட்ட அரசு வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு

Oct 6, 2022, 5:17 PM IST

குன்றத்தூர் - திருப்பெரும்புதூர் சாலை, குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் அருகே திருப்பெரும்புதூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று அங்கு சாலையோரம் இருந்த  மைல் கல்லை இடித்தபடி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில் காரின் டயர் மற்றும் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து அருகில் சென்று பார்த்தனர். அப்போது காரை ஓட்டி வந்த நபர் தள்ளாடியபடி வெளியே எழுந்து வந்தார். 

மேலும் அந்த கார் அரசுக்கு சொந்தமான கார் என்றும் தலைமை செயலகத்தில் அதிகாரி ஒருவருக்கு இயக்கக்கூடிய கார் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. காரை ஓட்டி வந்த நபர்கள் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சம்பந்தப்பட்ட இருவரும் சாலையின் ஓரத்தில் பள்ளத்தில் இறங்கிய காரை அங்கிருந்து அவசர, அவசரமாக எடுத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் காரை குடிபோதையில் அரசு வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் யார்? என்று குன்றத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.