பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்ட ஊழியருக்கு சரமாரியாக அடி... தஞ்சையில் நடந்த பரபரப்பான சிசிடிவி காட்சி..!

Mar 6, 2019, 11:16 AM IST

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த அன்பு இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில்  டிரைவராக  வேலை பார்க்கிறார். சில நேரங்களில் அங்கு பெட்ரோல் நிரப்பும் பணியிலும் ஈடுபட்டுவந்துள்ளார். 
இந்த நிலையில் அங்கு   மானோஜிப்பட்டி ஐயன் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடும் படி  அன்புவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அன்பு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் நிரப்பி விட்டு அதற்கான பணத்தை சந்திரகுமார் இடம் கேட்டுள்ளார்.  ஆனால் சந்திரகுமார் என்னிடமே பணம் கேட்கிறாயா எனக் கூறி  வாக்குவாதம் செய்து. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சந்திரகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து. பின்னர் அன்புவை சரமாரியாக தாக்கி விட்டு  பெட்ரோல் பங்க் நிரப்பும் எந்திரம் மற்றும் அங்குள்ள சில பொருட்களை சூரயாடினார். இந்த தாக்குதலில் அன்பு பலத்த காயமடைந்தார் . சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .இதுகுறித்து அன்பு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்தனர் . இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.