
கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நிறைவு பெற்றது. இன்னும் 3 மாதத்தில் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரன் தெரிவித்துள்ளார்.இந்த ஆணையம் சார்பில் 36 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது என்றும், 1,048 பேரிடம் விசாரணை நடந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.அதேசமயம், தமிழக அரசு உத்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையமும் விசாரித்து வந்தது. மொத்தம் 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 36 கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.
கடைசி கட்ட விசாரணையில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் இன்றுடன் சாட்சிகள் விசாரணையை நிறைவு செய்துள்ளது. தொடர்ந்து, இது தொடர்பான அறிக்கையை விசாரணை ஆணையம் விரைவில் அரசிடம் சமர்பிக்க உள்ளது.