
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என TNPSC தெரிவித்துள்ளது.அதேபோல், இம்முறை நடத்தப்படும் தேர்வுகளில் சில முக்கிய மாற்றங்களை தேர்வாணையம் கொண்டுவந்துள்ளது. இதுவரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற தேர்வுகள், இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதன்படி காலை வேளையில் 9.30 முதல் 12.30 வரை தேர்வு நடைபெறும். பிற்பகலில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம்போல் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள படி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதேநேரம் எஸ்சி, எஸ்டி, அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத உச்சபட்ச வயது வரம்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.இதில் முதல்நிலைத் தேர்வு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.