
புதுச்சேரியில் கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசின் உசான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் விமான சேவை தொடங்கப்பட்டது. அதன் படி, ஸ்பைஸ் ஜெட் விமான போக்குவரத்து நிறுவனம், புதுச்சேரிக்கும் ஹைதராபாத்திற்கும் இடையே விமான சேவை தொடங்கியது. இதனையடுத்து, பெங்களுருவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
முதல், இரண்டாம், மூன்றாம் அலைகளின் தாக்கம் குறைந்து, தற்போது தான் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நன்கு குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1421 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 149 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று ஒரு நாள் மட்டும் 1,826 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு நிகராக மீண்டும் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. முன்னதாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை "வந்தே பாரத்" திட்டத்தின் மூலம் தாயகம் மீட்கப்பட்டனர். பயோ பபுள் முறையில் குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் புதுச்சேரியிலும் இன்று முதல் மீண்டும் ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. ஹைதராபாத்- புதுச்சேரிக்கு இடையே விமானசேவை தொடங்கப்பட்டதையொட்டி, புதுச்சேரி வந்த விமானத்திற்கு தண்ணீர் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் இருந்து முதல் விமானத்தில் வந்த ஆளுநர் தமிழசை செளந்தரராஜனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் , சட்டப்பேரவை துணைத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.