இங்க பாருங்க… அணில் பண்ணிய வேலை… அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது நெஜம்தானோ…?

By manimegalai aFirst Published Oct 1, 2021, 8:17 PM IST
Highlights

காங்கேயம் அருகே மின்கம்பியில் அணில் ஓடியதால் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

திருப்பூர்: காங்கேயம் அருகே மின்கம்பியில் அணில் ஓடியதால் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற தருணத்தில் பரவலாக மின்சார வினியோகம் தடைப்பட்டது. எப்போது கரெண்ட் இருக்கும்? போகும்? என்று கணிக்க முடியாத நிலை உருவாக மக்கள் தரப்பில் இருந்து கடும் அதிருப்தி எழுந்தது.

தொடர் மின்வெட்டு குறித்து கருத்து சொன்ன மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார வெட்டுக்கு மின் கம்பிகளில் அணில் ஓடுகிறது, அதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின்தடை ஏற்படுகிறது என்றார். மேலும் கடந்த ஆட்சியின் பராமரிப்பு பணிகள் முழுமையாக செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் புகார் கூறினார்.

அவரது இந்த பதிலுக்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கடுமையாக கேலி செய்தன. ஒரு கட்டத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களின் பெட்டர் சாய்ஸ் ஆக மாறி போனது செந்தில் பாலாஜியின் பதிலும், அதிமுகவின் பதிலடியும். செந்தில் பாலாஜியின் கூற்றை நிரூபிக்கும் வகையில் அணில்களால் மின்தடை என்ற விவரங்களையும் மின்சார ஊழியர்கள் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் அந்த விவகாரம் பெரிதளவுக்கு பேசப்படாமல் இருக்க…. அப்போது செந்தில் பாலாஜி கூறியது உண்மைதானோ என்று நினைக்கும் சம்பவம் ஒன்று காங்கேயம் அருகே நிகழ்ந்துள்ளது.

சிவன்மலை அருகே உள்ள வேலன்மகால் பகுதியில் முக்கியமான மின்பாதை செல்கிறது. இந்த பாதையில் உள்ள மின்கம்பம் அருகே அணில் இறந்து கிடந்துள்ளது. அதன் அருகில் மின் கம்பங்களில் பொருத்தப்படும் பீங்கான் கப்புகள் உடைந்து கிடந்துள்ளன.

அணில் ஓடியதால் தான் பீங்கான் கப்புகள் வெடித்து சிதறி இருப்பதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அணில் வாய் பீங்கானிலும், வால் மின்கம்பத்தில் பட்டதால் பீங்கான் கப் வெடித்துள்ளது என்றும் அவர்கள் கூறி உள்ளது. அணில் சேட்டையால் அப்பகுதியில் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக மின்வினியோகம் இல்லை. மின்வாரிய ஊழியர்களின் உடனடி நடவடிக்கைக்கு பின்னரே மின்சாரம் மீண்டும் வினியோகிக்கப்பட்டது.

click me!