தற்கொலைக்கு முயன்ற எம்.பி கணேசமூர்த்திக்கு எக்மோ சிகிச்சை.. உடல் நிலை எப்படி இருக்கு.? வெளியான தகவல்

By Ajmal KhanFirst Published Mar 25, 2024, 9:01 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் மதிமுக எம்பி கணேச மூர்த்தி தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருதய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கணேச மூர்த்தி தற்கொலை முயற்சி

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக போராடி வரும் நிலையில், மதிமுக எம்பி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தி.மு.கவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் தான் கணேசமூர்த்தி,  1984ல் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது. அதன்பின், படிப்படியாக அவரது செல்வாக்கு உயர்ந்த நிலையில், 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து கருணாநிதி- வைகோ இடையே ஏற்பட்ட மோதலையடுத்து வைகோவுடன் இணைந்து கட்சியில் இருந்து வெளியேறினார். இந்தநிலையில் தான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க கூட்டணியில்  உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.பியாக உள்ளார்.

சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி

தற்போது நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தன்னை மீண்டும் வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.  நேற்று காலை தனது வீட்டில் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிறார். இதனை கண்ட கணேசமூர்த்தி உறவினர்கள் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அடுத்ததாக கோவை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணேசமூர்த்தி உடல் நிலை குறித்து கேட்டறிய வைகோ மற்றும் துரை வைகோ மருத்துமனைக்கு வந்தனர். 

உடல்நிலை எப்படி உள்ளது.?

கணேஷமூர்த்தி உடல் நிலை தொடர்பாக துரை வைகோ கூறும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்  கவலைக்கிடமாக  உள்ளதாகவும் தெரிவித்தார்.  உடல் நிலை சீராக இருந்தாலும் இப்போது எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே 24 மணி நேரம் முதுல் 48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார்.

இருதய சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது எனவும் பிற உறுப்புகளுக்கான ஆய்வறிக்கைகள் வந்தால் தான் முழுமையாக சொல்ல முடியும் எனவும் கூறினார்.  ஈரோட்டு மருத்துவமனையில் வயிற்று சுத்தம் செய்து கொண்டு வரப்பட்டும் , ரத்தத்தில் விஷம் கலந்துள்ளதால் இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்றால் சும்மாவா ? திடீரென ராஜினாமா செய்தது ஏன் ? தமிழிசை விளக்க அறிக்கை

click me!