தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 4 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக அந்த மாணவி பெற்றோரிடம் புகார் அளித்த நிலையில் மாணவியின் உறவினர்கள் பள்ளியை அடித்து உடைத்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முக்கிய குற்றவாளியானபள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயளார் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது.
மு.க.ஸ்டாலின் அவர்களே- பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது. ஒரு 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள். உங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது ஆட்சி?
கடுமையான நடவடிக்கை எடுத்திடுக
மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றுமொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் , அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது. எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா ? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.