சிவகங்கை தொகுதி வேட்பாளர்: பாஜக தலைமைக்கு காங்கிரஸ், அதிமுக நன்றி தெரிவித்து போஸ்டர்!

By Manikanda PrabuFirst Published Mar 23, 2024, 4:45 PM IST
Highlights

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளராக தேவநாதன் யாதவை அறிவித்ததற்கு பாஜக தலைமைக்கு காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளன

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டின் 19 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் பாமகவுக்கும், 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸுக்கும், 2 தொகுதிகள் அமமுகவுக்கும், ஒரு தொகுதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கும் (ஓபிஎஸ் அணி) ஒதுக்கப்பட்டுள்ளது. ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ், பச்சமுத்து, ஏசிஎஸ் ஆகியோரது கட்சி தாமரை சின்னத்தில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது.

அந்த அவகையில், சிவகங்கை தொகுதியின் வேட்பாளராக பாஜக சார்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் தேவநாதன் யாதவ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஏப்ரல் 1இல் விசாரணை: வெளியே வந்தால் அண்ணாமலைக்கு சிக்கல்!

இந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக தேவநாதன் யாதவ் அறிவிக்கப்பட்டதற்கு, பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளன.

அதில், சிவகங்கை தொகுதியில் பாஜகவின் எளிய வெற்றியை எட்டாக்கனியாக்கிய பாஜக தேசிய, மாநில தலைமைக்கு  ஆழ்ந்த இரங்கலும், பாரட்டுகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற போஸ்டர்களில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை எளிதாக வெற்றி பெற செய்ய திருநெல்வேலியில் இருந்து சிவகங்கை பாராளுமன்றத்துக்கு சீட்டு கொடுத்த பாஜக தேசிய, மாநில தலைமைக்கு மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!