பூச்சாண்டிகளுக்கு அதிமுக என்றும் பயப்படாது: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

By SG BalanFirst Published Apr 13, 2024, 6:31 PM IST
Highlights

"அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோவார்கள். ஜூன் 4க்கு பிறகு யார் காணாமல் போவார்கள் என்று பார்க்கலாம்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான் என்றும் அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூரில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அரியலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"தேர்தலுக்குப் பிறகு உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தெரியும். எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அ.தி.மு.க. தெய்வ சக்தி உள்ள கட்சி; அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

அ.தி.மு.க.வை சீண்டி பார்க்காதீர்கள்; அப்படி பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கெல்லாம் அ.தி.மு.க. என்றைக்கும் பயப்படாது. அ.தி.மு.க.வை அழித்த நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கி கொண்டு அலைகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பார்க்கவே இல்லை. தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார். சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்கிறார். தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். கஞ்சா கிடைக்காத இடமே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பா.ஜ.க. கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அ.தி.மு.க.விற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம்."

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

click me!