கேரளத்தில் தலைவிரித்தாடும் வன்முறை அரசியல்: இடதுசாரி மிரட்டலுக்கு ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., பதில் 

Nov 26, 2017, 8:40 PM IST



கேரளத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி அமைந்த பின்னர் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக பாஜ., கட்சித் தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனைக் கண்டித்து ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர். நடுநிலையாளர்கள், கேரளத்தில் நடைபெறும் அராஜகங்களைக் கண்டித்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிபிஐ(எம்) கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எஃப்.ஐ.,) அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகருக்குச் சொந்தமான ரிசார்ட் ஒன்றில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலைக் கண்டித்த அவர், இது குறித்துக் கூறுகையில், இடதுசாரி அமைப்பினர் அரசியல் மனத் தளர்ச்சி மற்றும் ஏமாற்றத்தின் காரணத்தால் இது போன்ற முட்டாள்தனமான செயல்களில் இறங்கியிருப்பதாகக் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை அன்று கேரள மாநிலம் குமரகத்தில் உள்ள நிராமயா ரிட்ரீட்ஸினுள் புகுந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அரசுக்குச் சொந்தமான இடத்தில் அந்த ரிசார்ட்ஸ் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

More in - stung by unrelenting media coverage n my petition on his complicity in encroachmnt - unleashes his goons on company linked to me ! pic.twitter.com/CPMy9NKM93

— Rajeev Chandrasekhar (@rajeev_mp)

முன்னதாக, மலையாள செய்தி சேனலான ஏசியாநெட் நியூஸ், கேரள போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தாமஸ் சாண்டி, அரசுக்குச் சொந்தமான விளைச்சல் நிலத்தை ஆக்கிரமித்தது குறித்து ஆதாரபூர்வமான செய்திகளை அளித்திருந்தது. அது, மாநில முதல்வர் பிணரயி விஜயனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்தி சேனலை நடத்தி வரும் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., மீது இது போன்ற குற்றச்சாட்டைப் புனைந்தது, குமரகம் பஞ்சாயத்து.

சிபிஐ(எம்) அதிகாரம் செலுத்தும் குமரகம் பஞ்சாயத்து, திடீரென ரிசார்டின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளது என்று புகார் கூறி, மாநில வருவாய்த் துறை அமைச்சருக்கு துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ளச் செய்தது.

அண்மைக் காலமாக கேரளத்தில் நிகழ்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினரின் அராஜகத் தாக்குதல்கள் குறித்து வெளிப்படையாகத் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுயேட்சை எம்.பி.யான ராஜீவ் சந்திரசேகர். இதனால், அவர் மீது வன்முறை அரசியலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர்.

CEO resort in Kerala was destroyed by CPM. Minister Thomas chandy's resort left untouched. pic.twitter.com/ikFlK5CCHy

— K Surendran (@surendranbjp)

இதனைத் தம் டிவிட்டர் பக்கத்தில் கூறி கண்டித்துள்ள அவர், “ஆளும் இடதுசாரிகள், சட்டத்தின் மீது நம்பிக்கை அற்று, குண்டர்களின் ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் விரைவிலேயே, சட்டத்தின் துணை கொண்டு போராடுபவர்களின் சக்தியை உணர்ந்து கொள்வார்கள்” என்று கூறினார். மேலும், இந்தத் தாக்குதல் குறித்து கேரள முதல்வர் பிணரயி விஜயனுக்கு செய்தியாகக் கூறிய அவர், “உங்கள் செய்தியை குண்டர்கள் மூலம் எனக்குச் சொல்ல நீங்க விரும்பினீர்கள் என்றால், உங்கள் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. நான் கேரளத்தில் இருந்து உங்களின் வன்முறை அரசியலை ஒழிப்பதில் தீவிரம் காட்டுவேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து உள்ளூர் போலீஸார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் மீது சொத்தையான பிரிவுகளில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தத் தாக்குதல் சம்பவத்தில், புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர், முன்னர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய ஒருபுகைப்படத்தில் இருந்தவர் என்று கூறப்படுகிறது. அந்த நபர், பாஜக., தொண்டர்களைத் தாக்கியதாக முன்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், காவல் நிலையத்திலேயே அவர் எஸ்.ஐ.,யின் காவல் துறை தொப்பியை அணிந்து கொண்டு, செல்ஃபி எடுத்து பதிவிட்டார். காவல் துறையே எங்கள் பிடியில் என்பது போல் பதிவிட்ட அந்த நபரே இந்தத் தாக்குதல் சம்பவத்திலும் சம்பந்தப் பட்டுள்ளாராம்.

The main culprit behind resort attack is the same notorious DYFI "activist" who took selfie frm police station wearin SI cap n got arrested for beating workers. Law n order has collapsed in . Thank u for ur relentless and courageous fight for Kerala. pic.twitter.com/A8disGk9cT

— Dr. Bharat K (@indian_ai)

இதனைத் தம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்ட ராஜீவ் சந்திரசேகர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது சாதாரண வழக்குகளைப் பதிவு செய்து, முதல்வர் பிணரயி விஜயனின் காவல் துறை அவர்களை பிணையில் செல்ல அனுமதித்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

Heres evidence n proof of complicity in vandalism n violnce - police (under him) file a weak chargesheet against DYFI criminls n allow thm bail !😠https://t.co/CNBQSwPaJW

— Rajeev Chandrasekhar (@rajeev_mp)

இதனிடையே இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கிய இடதுசாரிகள், பதவி விலகிய தாமஸ் சாண்டி விவகாரம் குறித்து பிரசாரம் செய்தனர்.

இடதுசாரி கூட்டணி அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தாமஸ் சாண்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர், தனது சொகுதியான ஆழப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் நெல் விளையும் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து ஆடம்பர விடுதி கட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான செய்திகளை ஆதாரபூர்வமாக ஏசியாநெட் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், ஆலப்புழா மாவட்ட ஆட்சியரும் அறிக்கை அளித்தார். ஆனால், இந்த அறிக்கையை ரத்து செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் தாமஸ் சாண்டி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ''ஆட்சியில் இடம் பெற்றுள்ள அரசுக்கு எதிராகவே மனு தாக்கல் செய்துள்ள நீங்கள், அதற்கு பதிலாக பதவியில் இருந்து விலகலாம்'' என தாமஸ் சாண்டியை கண்டித்தது. இதனால் எழுந்த பிரச்னை, பிணரயி விஜயனுக்கு பெரும் தலைவலியைத் தந்தது. இதை அடுத்து, குறுகிய காலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணியில் இருந்து பதவி விலகிய மூன்றாவது அமைச்சரானார் தாமஸ் சாண்டி. அவர் கடந்த நவ.15ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குள், குமரகம் பஞ்சாயத்தில் அவசர அவசரமாக ஒரு புகாரைத் தயார் செய்து, மாநில வருவாய்த் துறை மூலம் விசாரணைக்கு ஏற்பாடு செய்தது மாநில அரசு. மேலும், தாமஸ் சாண்டி போல், ராஜீவ் சந்திரசேகரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். அடுத்து, இதையே சாக்காகக் கொண்டு, அந்த விடுதியின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர் மார்க்சிஸ்ட் குண்டர்கள்.

இத்தகைய பின்னணியில், இதற்கு பதிலளித்துள்ள ராஜீவ் சந்திரசேகர், தனது டிவிட்டர் பதிவில், “நான் சந்தோஷமாக ராஜினாமா செய்வேன். அது, உங்களின் வன்முறை, மிரட்டல் அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு... உங்களில் சிலரை அல்லது உங்களின் வன்முறைவாதிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டு... ராஜினாமா செய்வேன். எனவே அமைதியாக இருங்கள் காம்ரேட்களே” என்று கூறியிருந்தார்.

I undrstnd post dvfake n belated notice frm CPM cntrlld panchayat, wants me 2 resign 😄
My resp - I will happily resign aftr
a) I shut dwn ur violent/blackmail politics
b) Aftr i send some or all of ur “activists” 2 jail
So b patient comrades 🙏🏻

— Rajeev Chandrasekhar (@rajeev_mp)

இதனிடையே தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மார்க்சிஸ்ட் அரசால் தன்மீது சந்தேகத்திற்கிடமான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். அரசு இடத்தில் 6 செண்ட் நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்து கூறுகிறது. இந்த விவகாரத்தில் எந்த விதமான விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன். ஆனால், விடுதிக்குள் புகுந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. ஆக்கிரமிப்பு குறித்து எதுவும் பதிவேடுகளில் இருந்தால், நீதிமன்றத்துக்குச் சென்று முறையிட வேண்டும். இடதுசாரிகளின் நிர்வாகத்தில் இருக்கும் கிராம பஞ்சாயத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு நான் பதிலளிப்பேன் என்று கூறியிருந்தார்.

மேலும், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது போன்ற கீழ்த்தரமான அரசியலைக் காட்ட வேண்டாம். மாநிலத்தின் பெரும்பாலானவர்கள், கேரளத்தில் இருந்து வன்முறை அரசியலை அகற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது போன்ற கீழ்த்தர அரசியலை மறந்துவிட்டு, கேரள இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இடதுசாரிகள், வறுமையை ஊக்குவிப்பதிலும், வேலையின்மையை ஊக்குவிப்பதிலும் முற்படுகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். காரணம் இதுபோல் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருந்தால்தான், வன்முறை அரசியலை வாழ்நாள் முழுதும் சார்ந்து இருப்பார்கள். இது தான் இடதுசாரி அரசியல் என்பதை அறிவோம். இளைஞர்களை இத்தகைய அரசியல் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இழுக்கக்கூடாது. பிணரயி விஜயனுக்கு எனது அறிவுரை இதுதான்.” என்று கூறியுள்ளார்.

We lost 17 dedicated Karyakartas including four promising Dalit leaders & a lady during these 17 months of Pinarayi Vijayan's Communist rule.Seeking support of nationalists in exposing & . pic.twitter.com/Tp3v5dnv2B

— KummanamRajasekharan (@Kummanam)

வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில், கேரளத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மத, இன, அரசியல் ரீதியான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இடதுசாரி வன்முறைக்கு ஞாயிற்றுக் கிழமை இன்று திரிச்சூரில் அண்மையில் பாஜகவில் இணைந்த தலித் தலைவரான சதீஷன் படுகொலை செய்யப் பட்டு பலியாகியுள்ளார். கடந்த 17 மாதங்களில் 17 பேர் இடதுசாரிகளின் அரசியல் வன்முறைக்கு பலியாகியுள்ளனர்.