India@75 Freedom Fighters: லட்சுமி சேகல் - சுபாஷ் சந்திர போஸின் படையில் கேப்டனான தமிழ்ப் பெண்!

By Raghupati RFirst Published Mar 28, 2022, 1:57 PM IST
Highlights

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரிய அளவில் அரியப்படாத தியாகிகளும் இருக்கிறார்கள். அவர்களில் கேப்டன் லட்சுமி சேகலும் ஒருவர். 1943-ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவுக்கு தலைமை பொறுப்பை வகித்தவர் லட்சுமி சேகல்.

லட்சுமி 1914 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சுவாமிநாதன்-அம்மு தம்பதிக்கு மகளாக சென்னையில் பிறந்தார். இவருடைய தந்தை  சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். இவருடைய தாய் அம்மு சுவாமிநாதன் பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்த குட்டி மாலு அம்மா விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்.  எனவே, இளம் வயதிலேயே சமூக சேவை,  நாட்டு விடுதலை போன்றவற்றில் ஆர்வமாக இருந்தார் லட்சுமி.

9-ஆம் வகுப்பில் படிக்கும்போதே மருத்துவம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் லட்சுமி. பள்ளிப் படிப்புக்குப் பிறகு 1930-ல் இடைநிலைக் கல்வியை சென்னை ராணி மேரி கல்லூரியில் முடித்த லட்சுமி, 1938 -ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் லட்சுமியின் தாயாரும் தங்கையும் அமெரிக்காவில் இருந்தனர். தந்தை அதற்கு முன்பே இறந்திவிட்டதால், சென்னையில் தனிமையில் வாழ்ந்து வந்த லட்சுமி, 1940-இல் சிங்கப்பூர் சென்றார். 

தன்னுடைய உறவினர் ஒருவருக்கு மருத்துவர் தேவை என்பதால்தான் அங்கு சென்றார். 1942-இல் பிரிட்டன் - ஜப்பானியப் போர் நடைபெற்ற காலம். அந்தப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிங்கப்பூரில் மருத்துவ உதவிகளைச் செய்தார் லட்சுமி. பின்னர் சிங்கப்பூரில் ஏழைகளுக்காக மருத்துவமனை ஒன்றையும் தொடங்கினார். இதனால் வெகு விரைவிலேயே சிங்கப்பூரில் ஒரு நல்ல மருத்துவர் எனப் புகழ் பெற்றார். அப்போது இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளில் குடியேறியவர்கள், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை நீக்க இந்திய சுதந்திர கூட்டமைப்பு (India Independence league) என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டு வந்தார்கள். 

இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்று 1943-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் வந்தார். சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய படையில்  ஜான்சி ராணி படை என்ற பெயரில் உள்ள ஒரு படை இருப்பதையும் அதில் பெண்கள் சமமாகப் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் சுபாஷ் சந்திர போஸ். அந்தப் படையில் இணைந்து பணியாற்ற லட்சுமி விருப்பம் தெரிவித்தார். அடுத்த நாளே சுபாஷ் சந்திர போஸிடமிருந்து லட்சுமிக்கு அழைப்பு வந்தது. அப்படைக்குத் தலைமையேற்கும் வாய்ப்பை லட்சுமிக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழங்கினார். 

இதனால் கேப்டன் லட்சுமி என்றழைக்கப்பட்ட அவர், அந்தத் தருணம் முதல் நாட்டுக்காக நட்பு, பாசம் என எல்லாத் தொடர்புகளையும் விட்டுவிட்டு நாட்டு விதலையும் போராட்டமே வாழ்க்கை என்றும் உறுதியை மேற்கொண்டார்.  20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பின்னர் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 1945-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்ககத்துக்கு எதிரான போர் பற்றி விவாதத்தில் சிங்கப்பூரில் கேப்டன் லட்சுமி தீவிரமாக இருப்பதை அறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம், லட்சுமியை கைது செய்ய பிரிட்டிஷ் படைகளுக்கு பணித்தது. 

அதன்படி லட்சுமியை கைது செய்த பிரிட்டிஷ் படை, சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. கல்கத்தா வந்து சேர்ந்த லட்சுமி, காவல் நிலையத்துக்கு தினந்தோறும் செல்ல நேர்ந்தது. பின்னர் கல்கத்தாவில் இருந்தபடி நாடு சுதந்திரம் அடையும் வரை தன்னுடைய போராட்டங்களைத் தொடர்ந்தார். பெண்கள் வீட்டை விட்டே வெளியே வரவே அஞ்சிய காலத்தில் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய படையில் இணைந்து மகளிர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய கேப்டன் லட்சுமியின் தியாகத்தை என்றென்றும் போற்றுவோம்.

click me!