Asianet News TamilAsianet News Tamil

பயிரிட்டுள்ள மஞ்சளில் ஏற்படும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை போக்குவது எப்படி?

How to minimize micro nutrient deficiency in the cultivated turmeric?
How to minimize micro nutrient deficiency in the cultivated turmeric?
Author
First Published Jul 9, 2018, 1:22 PM IST


பயிரிட்டுள்ள மஞ்சளில் ஏற்படும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை போக்கும் டிப்ஸ்:

துத்தநாக சத்து

துத்தநாக சத்துக் குறைபாடு மண்ணின் அமில கார நிலை 7-க்கு மேல் உள்ள நிலங்களிலும் அதாவது களர் நிலங்களிலும், களிமண் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நிலங்களிலும் அதிகமாகக் காணப்படும்.

மேலும், இந்தச் சத்து குறைபாடானது தண்ணீர் பற்றாக்குறை அதிகமுள்ள காலங்களில் பரவலாகக் காணப்படும். இதனால், பயிர்கள் வளர்ச்சி குன்றி, குட்டையாகக் காணப்படும். இலைகள் அளவில் சிறியதாகவும், கணுவிடைப் பகுதியின் நீளம் குறுகியும் காணப்படும். மேலும், இளம் இலைகள் மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். இலைகள் மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வளைந்து காணப்படும்.

போக்கும் முறை

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை அதாவது 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில், 10 நாள்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரை தொடர்ந்து இலைகள் மீது தெளிக்க வேண்டும்.

மேலும், அடுத்த சாகுபடி செய்யும் பயிர்களில் துத்தநாக சத்து குறைபாடு வராமல் தடுக்க ஹெக்டேருக்கு 15 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், இதை ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:1 என்ற விகிதத்தில் கலந்து மிதமான ஈரப்பதத்தில் 20-25 நாள்கள் வைத்திருந்து பயிருக்கு இடுவதன் மூலம் உரப் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து குறைபாடானது மணல் பாங்கான நிலங்கள், சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள நிலங்கள், களர் உவர் நிலங்களில் அதிகமாகக் காணப்படும். இந்த சத்துக் குறைபாட்டால் புதியதாக வெளிவரும் துளிர்கள் வெளுத்து மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறிவிடும். 

இலைகளின் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் வெளிறியும், இலைகள் நரம்புகள் பச்சை நிறமாகவும் காணப்படும். இந்த குறைபாடு அதிகமுள்ள நிலங்களில் மஞ்சள் பயிரானது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும்.

போக்கும் முறை

இரும்புச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய 0.5 சத இரும்பு சல்பேட் கரைசலை அதாவது, 5 கிராம் இரும்பு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை நேரங்களில் இலைகளின் மீது நன்றாகபடும்படி தெளிக்க வேண்டும். 

இவ்வாறு 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும், அடுத்தமுறை பயிர் செய்யும்போது இத்தகைய குறைபாடு தோன்றுவதைத் தவிர்க்க ஹெக்டேருக்கு 30 கிலோ இரும்பு சல்பேட் உரத்தை அடியுரமாக இடவேண்டும்

Follow Us:
Download App:
  • android
  • ios