Asianet News TamilAsianet News Tamil

மாடுகளுக்கு உண்டாகும் நோய்களும், அவற்றைத் தடுக்கும் முறைகளும்…

cows caused-diseases-methods-of-prevention
Author
First Published Jan 11, 2017, 1:13 PM IST


1.. பித்தப்பை நோய்

இந்நோய் அனப்பிளாஸ் மார்ஜிநேல், அனாபிபிளாஸ்மா சென்டிரேல் என்ற ஓரணு உயிரியால் மாடு மற்றும் எருமைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள், பேன்கள் மூலம் பரவுகிறது. மேலும் ஊசிகள், கொம்பு நீக்கும் கருவிகள், ஆண்மை நீக்கம் செய்யும் கருவிகள், அடையாளக் குறியிடும் கருவிகள் மூலமும் பரவுகிறது.

இந்த நுண்ணுயிரியானது இரத்தச் செல்களை அழிப்பதால் இரத்தசோகை, எடை குறைவு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். அதோடு பாதிக்கப்பட்ட கால்நடையில் காய்ச்சல் அதிகமாகி பின்பு குறையும். பசியின்மை, மூக்கு காய்தல் மற்றும் மருத்துவம் செய்யாமல் அதிக நாட்களானால் மஞ்சள் காமாலை ஏற்படும். வயது முதிர்ந்த மாடுகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பண்ணையில் ஏதேனும் மாடு இந்நோயினால் பாதிக்கப்பட்டால் உடனே தடுப்பு நடவடிக்கையாக உண்ணிகள், பேன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்தவரை நோயின் ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சையளித்தல் சிறந்தது.

தடுப்பு முறை

சிடிசி எனப்படும் ‘குளோர்டெட்ராசைக்ளின்’ அனாப்பிளாஸ்மாசிஸைக் கட்டுப்படுத்துகிறது. இதை 0.5 மிகி / 16 உடல் எடைக்கு அளவு உட்கொள்ளச் செய்யலாம். கிருமி நாசினி மற்றும் பிற மருந்துகள் மூலம் உண்ணி,பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

2.. அடைப்பான் நோய்

இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நோயாகும். மாடுகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது.  நம் நாட்டில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வெப்பம் மிகுந்த, ஈரக்கசிவுள்ள, காற்றோட்ட வசதியுள்ள இடங்களிலும் இந்நோய் அதிகம் காணப்படுகிறது.

இந்நோய்க் கிருமிகள் உடலிலிருந்து வெளியேறியவுடன் காற்றுடன் சேர்ந்து விரைவில் அழிக்க முடியாத ஸ்போர்களாக மாறி விடுகின்றன. கிருமிகள் தன் வெளிப்புறமாகக் கெட்டியான கவசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. கிருமி நாசினிகள் எளிதில் இக்கவசத்தினுள் சென்று நுண்கிருமிகளை அழிக்க முடியாது. இத்தகைய ஸ்போர்கள் நிலத்தில் தங்கி அவ்வப்போது மாடுகளைத் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்துடன் தண்ணீரில் கலந்து நீண்ட தூரம் எடுத்துச் செல்லப்பட்டு பிற மாடுகளுக்கு நோயையும் ஏற்படுத்துகின்றன.

நோய் அறிகுறிகள்

அ. இந்நோயால் மாடுகளில், திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்து விடும். இறந்தவுடன் மூக்கு, வாய், ஆசனம் போன்றவற்றிலிருந்து கருமை நிறமான இரத்தம் வெளியேறும்.

ஆ. காய்ச்சல் அதிக அளவு, 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இ. ஓரிரு நாட்களில் நோயின் வேகம் தணியும் போது காய்ச்சல் இருக்கும். மாடுகளில் உணர்வு இழப்பு ஏற்பட்டு பிறகு இறந்து விடும்.

தடுப்பும் பாதுகாப்பும்

அ. நோயுள்ள பகுதிகளில் நோய் ஏற்படும் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அடைப்பான் தடுப்பூசி போடவேண்டும். நோயில்லாப் பகுதிகளில் தடுப்பூசி தேவை இல்லை.

ஆ. இந்நோயால் இறக்கும் முன்பு, இரத்தப் பரிசோதனை செய்து நோய் இருப்பதை உறுதி செய்த பின்பு சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். இதற்குப் பின்பு மாட்டின் தோலை உரிக்கவோ அல்லது இறப்பரிசோதனையோ செய்யவோ கூடாது. காரணம் இக்கிருமிகளை வெளியில் காற்றுடன் கட்டுப்படுத்துவதும் கடினம். எனவே மாட்டை ஆழமான குழியில் புதைத்தோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்தவேண்டும்.

இ. இரத்தக்கசிவுடன் உள்ள பொருட்கள் அனைத்தையும் எரித்துவிடவேண்டும். அந்த இடத்தை 3 சதவீதம்ம் பீனால் கரைசலைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

3.. தொண்டை அடைப்பான்

இந்நோய் பெரும்பாலும் மழைக்காலத்தில் குறிப்பாக நீர்ப்பாசனம், வெள்ளப்பெருக்கு மிகுதியாக உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. கறவை மாடுகள் குறிப்பாக எருமை மாடுகள், இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தூரப்பயணத்திற்குப் பின்பும் அதிக நேரம் குளிர் மற்றும் மழையின் பாதிப்பிற்கு பின்பும் இந்நோய் ஏற்படுகிறது. கலப்பினப் பசுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

நோய் அறிகுறிகள்

அ. கடுமையான காய்ச்சல் ஏற்படும்.

ஆ. கண்கள் சிவந்து வீங்கிக் காணப்படும்.

இ. தலை, கழுத்து, தொண்டை, மார்பு போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும். வீக்கம் சூடாகவும், வலியோடு கூடியதாகவும் இருக்கும்.

ஈ. குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு காணப்படும். சாணம் இளகி இரத்தம் கலந்திருக்கும்.

உ. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்.

ஊ. வாயிலிருந்து மிகுதியான உமிழ்நீரும் வழிந்து கொண்டிருக்கும். நாக்கு தடித்துக் கறுப்பாகி விடும்.

எ. மாடுகள் எதையும் விழுங்கவும், மூச்சு விடவும் முடியாமல் திணறும்.

தடுப்பும் பாதுகாப்பும்

அ. எல்லா மாடுகளுக்கும் மழைக்காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடுப்பூசி போடவேண்டும்.

ஆ. நோயுற்ற மாடுகளை உடனடியாக மற்ற மாடுகளிடமிருந்து பிரித்து, தகுந்த மருத்துவம் செய்து பாதுகாக்கவேண்டும்.

இ. பொதுச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும். தொடக்க நிலையில் ஏற்ற மருத்துவம் செய்வதால், பாதிக்கப்பட்ட மாடுகளைக் காப்பாற்றி விடலாம்.

4.. சப்பை நோய்

இந்நோய் வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாகவும் உள்ள பகுதிகளிலுள்ள மாடுகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. இதுவும் ஓர் மழைக்கால நோயாகும். நல்ல ஆரோக்கியமான திடமான இளம் மாடுகளை 6 மாத வயது முதல் 3 ஆண்டு வயது வரை அதிகம் பாதிக்கிறது. இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்

  • திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
  • தொடை அல்லது முன்கால் சப்பையிலோ அல்லது கழுத்து போன்ற சதைப்பிடிப்புள்ள பகுதிகளிலோ வெப்பம் மிகுதியாகவும் வலியோடு கூடியதும், கடினமான தன்மையுள்ள பெருத்த வீக்கம் காணப்படும். இதன் காரணமாக மாடுகள் நடக்க முடியாமல் நொண்டும்.
  • இதன் பிறகு வீக்கம் குறைந்து, வலியற்று, வீக்கத்திற்குள் காற்று இருப்பதாலும், விரல் கொண்டு அழுத்தும் போது நறநறவென்ற சத்தம் வரும். வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்திலுள்ள தோலின் நிறம் கருப்பாக இருக்கும்.
  • நோய்க் கண்ட 48 மணி நேரத்தில் உடனடியாக மருத்துவம் செய்யாமல் போனால், மாடுகள் இறந்து விடும்.

தடுப்பும் பாதுகாப்பும்

அ. மழைக்காலத்திற்கு சுமார் 1 மாத்திற்கு முன்பே ஒவ்வொரு ஆண்டும் மாடுகளுக்குத் தடுப்பூசி போடவேண்டும்.

ஆ. நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் மாட்டைப்பிரித்துத் தனியாக ஒதுக்குப்புறமாக வைத்துக் கண்காணிக்கவேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மாட்டை உறுதியாகக் காப்பாற்றிவிடலாம்.

இ. சிகிச்சை அளிக்காவிட்டால் நோய்க்கண்ட மாடுகள் 5-7 நாட்களில் இறந்துவிடும். இறந்த மாடுகளைச் சுகாதார முறைப்படி அப்புறப்படுத்தவேண்டும். இறந்த இடத்தை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

5.. கருச்சிதைவு நோய்

இந்நோய், பாக்டீரியா நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய், அதிக பால் தரும் கலப்பினப் பசுக்களில் அதிகம் பொருட் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்திக் குறைவு போன்ற பல் காரணங்களால் இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் நோயுற்ற மாட்டின் நஞ்சுக் கொடி, இரத்தப் போக்கு போன்றவற்றை தொட்டு சுத்தம் செய்வத மூலமாகவும் மனிதர்களுக்குப் பரவுகிறது. பாலை நன்கு கொதிக்க  வைத்தபின் பருகவேண்டும்.

நோய் அறிகுறிகள்

அ. இந்நோய் காரணமாகச் சினை மாடுகளில் கருப்பையில் நோய் ஏற்பட்டு, கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்ற வீச்சு ஏற்படும்.

ஆ. கன்று வீச்சு ஏற்பட்டபின் நஞ்சுக் கொடி கருப்பையில் இருந்து வெளி வராமல் தங்கி விடும்.

இ. பசுவின் அறை அல்லது பெண் பிறப்புறுப்பிலிருந்து சீழ் போன்ற திரவம் வடியும்.

ஈ. கருச்சிதைவுற்ற மாடுகள் சினைக்கு வர கால தாமதம் ஆகும். சினை பிடிக்காது.

தடுப்பும் பாதுகாப்பும்

அ. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளை இரத்தப் பரிசோதனை செய்து இந்நோய் இருப்பின், பண்ணையிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும்.

ஆ. மாடுகளைப் புதிதாக வாங்கும் பொது இரத்தப் பரிசோதனை செய்த பிறகே வாங்கவேண்டும்.

இ. நோயுற்ற மாடுகளைக் கொட்டகையில் இருந்து அகற்றிவிடவேண்டும்.

ஈ. இறந்த கன்று, நஞ்சு, இரத்தம் போன்றவற்றை மிகவம் சுகாதாரமுடன் அப்புறப்படுத்தவேண்டும். பயன்படுத்தப்பட்ட வைக்கோல் போன்ற பொருட்களை எரித்துவிடவேண்டும்.

உ. நஞ்சுக் கொடியை அகற்றும் போது கைக்கு உறை அணியவேண்டும். தேவையான சுகாதார முறைகளைப் பின்பற்றவேண்டும்.

ஊ. கன்று வீசியவுடன் வாலின் நுனிப்பகுதியில் கர்ப்பப் பையிலிருந்து வெளியேறம் இரத்தம் தங்கி மாடு வாலை வீசும் போது, பக்கத்திலுள்ள தண்ணிர், தீவனத் தொட்டி மற்றும் மாட்டின் கண், வாய், மூக்கில் பட்டு நோய் பரவ நேரும். கன்று வீசிய மாட்டை உடனே தனியாக வைத்துப் பராமரிக்கவேண்டும்.

எ. நோயுற்ற பசுக்கைள இனவிருத்திக்கு அனுமதிக்கக்கூடாது.

ஏ. எல்லாக் கிடேரிக் கன்றுகளுக்கும் 6-9 மாத வயதில் இந்நோய் வராமல் தடக்க தடுப்பூசி போடவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios