நிலப் பிரச்சனையால் தொழிலாளி கொடூர கொலை; தலைமறைவான ஆறு பேருக்கு வலைவீச்சு…
விருதுநகர்
விருதுநகரில் நிலப் பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விவசாய கூலித் தொழிலாளி ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான ஆறு பேரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி (30). இவர் ஒரு விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கும் கோட்டையூரைச் சேர்ந்த சின்னகருப்பன் குடும்பத்தினருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்துவந்தது. இது தொடர்பாக இருவருக்குள்ளும் முன்விரோதமும் இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பால்பாண்டி தனது தந்தை அம்மாசியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்னகருப்பன் மற்றும் அவரது குழுவினர் பால்பாண்டியை தாக்க முற்பட்டனர். அதற்கு பயந்துபோய் பால்பாண்டி ஓட ஆரம்பித்தார். இருந்து அவரை விடாமல் ஆயுதங்களுடன் துரத்தினர் சின்னகருப்பன் குழுவினர்.
தன்னை காப்பாற்றி கொள்ள பால்பாண்டி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிகொண்டார். அப்போதும், கதவை உடைத்து உள்ளே சென்று பால்பாண்டியை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் நாகராஜன், கொலை செய்யப்பட்ட பால்பாண்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து பால்பாண்டியை கொலைசெய்துவிட்டு தலைமறைவான சின்னகருப்பன், ஈஸ்வரன், பெருமாள், வேடன், சுப்பிரமணி, முத்தையா ஆகியோரை காவல் ஆய்வாளர் நாகராஜன் தேடி வருகிறார்.