'அந்த' நேரங்களில் கிராமத்தைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் பெண்கள்; கொடுமைகளுக்கு தீர்வு கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை...
நீலகிரி
நீலகிரியில் உள்ள சில கிராமங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தீட்டுப்பட்டதாக கூறி கிராமத்திற்கு வெளியே ஒதுக்கி வைக்கின்றனர். இதுபோன்ற கொடுமைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ராஜூ நேற்று மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், "நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் உள்ள சில கிராமங்களில் பெண்களுக்கான மாதவிடாய் காலத்தில் அவர்களை தீட்டுபட்டவர்களாக கருதி சில நாட்கள் கிராமத்துக்கு வெளியே உள்ள ஒரு அறையில் பாதுகாப்பற்ற சூழலில் தங்க வைக்கின்றனர்.
திருமணமாகி குழந்தைகள் பெற்ற சில தாய்மார்கள் இந்த தொல்லையில் இருந்து விடுபட கர்ப்பப்பையை நீக்கிவிடும் செயல்கலும் இங்கு அதிகரித்து வருகின்றன.
இத்தகைய சமுதாய கொடுமைகளில் இருந்து பெண்கள் விடுதலை பெற இந்தக் கிராமப் பகுதிகளில் சுகாதார துறை மூலம் ஆய்வு செய்து, உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதேபோன்று கட்டபெட்டு பகுதியில் உள்ள சில கிராமங்களில் குழந்தை திருமணம் நடந்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் பள்ளி பயிலும் நான்கு மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளது.
இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார்.