வாய்பேச முடியாத பெண்ணின் கழுத்தை அறுத்த பெண் கைது; விசாரணை தொடர்கிறது...
தேனி
தேனியில் ஈவு இரக்கமின்றி வாய்பேச முடியாத பெண்ணின் கழுத்தை அறுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள முத்துசங்கிலிபட்டியைச் சேர்ந்தவர் தவமணி (23). இவர் வாய் பேச முடியாதவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அதேப் பகுதியைச் சேர்ந்த கதிர்வள்ளி (45) என்பவரது தோட்டத்தில் அனுமதியின்றி புல் அறுத்துள்ளார் தவமணி. அதனைப் பார்த்து கதிர்வள்ளி தட்டி கேட்டுள்ளார்.
அதன்பின்பும், தவமணி புல்லை அறுத்ததால், ஆத்திரம் அடைந்த கதிர்வள்ளி, தவமணியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால், பலத்த காயமுற்ற தவமணி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ராஜதானி காவலாளர்கள் வழக்குப் பதிந்து கதிர்வள்ளியைக் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.