இரண்டு நாள்கள் விடாமல் பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; இரவெல்லாம் தூக்கமில்லாமல் மக்கள் தவிப்பு…
வேலூர்
வேலூரில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவெல்லாம் தூக்கமில்லாமல் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பகலில் வெயில் கொளுத்தினாலும், இரவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து 45 நிமிடத்திற்கும் மேல் கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து இரவில் லேசான மழைபெய்து கொண்டிருந்ததால் வேலப்பாடி ராமர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிலட்சுமி என்பவருடைய வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது.
அதேபோன்று வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. சுமார் 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.
தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்தனர்.
வேலூர் நகரின் பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.