மதுரையில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்; ஒரே நாளில் 14 ஆயிரம் விண்ணப்பங்கள்…
மதுரை
மதுரையில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமில் ஒரே நாளில் 13 ஆயிரத்து 814 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
பதினெட்டு வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கம், திருத்தம், பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களில் படிவங்கள் பெறப்படுகின்றன.
வாக்காளர்களின் வசதிக்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெயர் சேர்க்க 8591 பேரும், பெயர் நீக்கம் செய்ய 3236 பேரும், திருத்தம் செய்ய 1157 பேரும், முகவரி மாற்றம் செய்ய 830 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 814 பேர் விண்ணப்பம் அளித்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது முதல் தற்போது வரை மொத்தம் 26 ஆயிரத்து 989 பேர் விண்ணப்பம் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் என்பது கொசுறு தகவல்.