அடிப்படை வசதிகள் கேட்டு கழுதைகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமாக-வினர் கைது…
தூத்துக்குடி
கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கழுதைகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரசார் 15 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் ரூ.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
ஆனால், “இங்குப் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை.
பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை.
பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை.
இலவச கழிப்பறை, கட்டண கழிப்பறை திறக்கப்படவில்லை.
புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை”
இவற்றையெல்லாம் கண்டித்தும், போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பேருந்து நிலைய வளாகத்தில் இரண்டு கழுதைகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தமிழ் மாநில காங்கிரசார் நேற்று வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவலாளர்கள் கழுதைகளுடன் வந்த தமாகா-வினரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்த இரண்டு கழுதைகளையும் பறித்தனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால், பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ரசாக், பாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் காளி பாண்டியன், வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, நகர செயலாளர் சுப்புராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் யோசுவா ஞானசிங், முத்துராமலிங்கம், மணிமாறன் உள்பட 15 பேரை காவலாளரள் கைது செய்தனர்.