கணவன் காட்டுத்தனமாக தாக்கியதால் மனமுடைந்த மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை….
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கணவன் காட்டுத்தனமாக தாக்கியதில் வேதனையில் மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கணவன் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்பனா (35). இருவருக்கும் சனிக்கிழமை ஏற்பட்ட குடும்பத் தகராறில் கல்பனா பூச்சி மருந்து குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தனது மகளை திருமணம் செய்து தருமாறு ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜித், அவரது தாய் செல்வி ஆகியோர் வற்புறுத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், எங்கள் குடுபத்தினரை தகாத வார்த்தைகளைக் கூறி திட்டினர். இதனால், மனமுடைந்து கல்பனா பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார்” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இரா.ஆண்டவர், உயிரிழந்த கல்பனாவை ரமேஷ் காட்டுத்தனமாக தாக்கியதும், தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்சனையால்தான் கல்பனா உயிரிழந்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்தார்.
இதனையடுத்து ரமேஷ் காவலாளர்களால் கைது செய்யப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரமேஷின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மத்தூர் நான்கு வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியலால், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறை உயரதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் ரமேஷ் தாக்கியதும், கணவன், மனைவி பிரச்சனையால் கல்பனா உயிரிழந்ததையும் எடுத்துக் கூறி மறியலை கைவிடச் செய்தனர்.