Asianet News TamilAsianet News Tamil

திருமணத்துக்கு மறுத்த பெண்...! பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மாணவன் கைது! ஒருதலை காதலால் விபரீதம்...!

The student arrested for attempting to murder a woman
The student arrested for attempting to murder a woman
Author
First Published Apr 30, 2018, 2:29 PM IST


திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த எம்.பி.ஏ. மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஷபீர் (23). அங்குள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், காட்பாடியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

வேற்று மதத்தினரான ஷபீரை திருமணம் செய்து கொள்ள பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள அந்த பெண் விரும்பினார். உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஷபீர் தொடர்ந்து கூறி வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இளம் பெண்ணின் தந்தை, ஷபீர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளார். அதில், தனது மகளை ஷபீர் ஒருதலையாக காதலிப்பதுடன், மதம் மாறும்படி மிரட்டுவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்த போலீசார் விசாரித்தனர். பின்னர், திருமணம் செய்து கொள்ளும்படி பெண்ணை தொந்தரவு செய்யக் கூடாது என்று ஷபீரை எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில், ஷபீரும் அந்த இளம் பெண்ணும் வேலூர் கிரீன் சர்க்கில் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு உணவு அருந்தி உள்ளனர். பின்னர் வீட்டுக்குப் புறப்படும்போது, திருமணம் குறித்து அந்த பெண்ணிடம் ஷபீர் பேசியுள்ளார். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஷபீர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார். கழுத்தில் வெட்டுபட்ட இளம் பெண்ணின் அலறலைக் கேட்ட பொதுமக்கள், அந்த பெண்ணை மீட்டு சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தப்பியோட முயன்ற ஷபீரை பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஷபீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்ற ஒரு சம்பவம் இன்று சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் பலர் முன்னிலையில் மாணவியின் கழுத்தை அறுத்த காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கழுத்தறுபட்ட மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை கத்தியால் அறுத்த மாணவன் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios