பலத்த மழையால் அரசுப் பள்ளிக்கு நேர்ந்த நிலைமை; தண்ணீர் தேங்கி குளமாய் காட்சியளிக்கிறது…
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பெய்து வரும் பலத்த மழையால் அகரம் அரசுப் பள்ளியில் மழை நீர் தேங்கி குளமாய் மாறி காட்சியளிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
இதேபோல போச்சம்பள்ளி பகுதியிலும் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
அதன்படி அகரம் அரசு பள்ளி வளாகத்தில் மழை நீர் செல்ல வழியிலாமல், குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்தப் பள்ளியில் பயின்று வரும் அகரம், சாதிநாயனப்பட்டி, சாப்பானூர், தட்ரஅள்ளி, குடிமேனஅள்ளி, தேவிரஅள்ளி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
ஏற்கனவே இந்தப் பள்ளியில் பயின்றுவரும் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் மழை நீர் தேங்கி கிடப்பதால், டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக பள்ளியில் தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.