குப்பைத் தொட்டியில் குழந்தைனு புரளியை கிளப்பிய விஷமிகள்; லாரியில் அள்ளிய குப்பைகளை தரையில் கொட்டி அலசிய காவல்துறை…
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் குழந்தை இருக்கிறது என்று கிளம்பிய புரளியால் துப்புரவு பணியாளர்களால் அள்ளப்பட்டு லாரியில் ஏற்றப்பட்ட குப்பைகளை மீண்டும் தரையில் கொட்டி காவலாளர்கள் சோதித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு மூன்றாம் வீதியில் குப்பைத்தொட்டி உள்ள குப்பைத் தொட்டியில் நீண்ட நாள்களாக குப்பை அள்ளப்படவில்லை.
இதனால், அதிக அளவு குப்பைச் சேர்ந்து அந்த இடமே குப்பை மேடாக கிடந்தது. இதனைத் தொடர்ந்து நகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் தனியார் லாரியில் குப்பைகளை ஏற்றி அப்புறபடுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த விஷமிகள் யாரோ குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை இறந்து கிடக்கிறது என்று நகராட்சி அதிகாரிகளுக்கும், புதுக்கோட்டை நகர காவலாளர்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பதறியடித்துக்கொண்டு வந்த புதுக்கோட்டை நகர காவலாளர்கள் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரா மற்றும் அதிகாரிகள் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களிடம் லாரியில் ஏற்றப்பட்ட குப்பைகளை கீழே கொட்டச் சொல்லி, அந்த குப்பைகளை சோதனை செய்தனர். அந்தக் குப்பையில் குழந்தை எதுவும் இல்லை.
பின்னர் நகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை மீண்டும் அகற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சம்பவ இடத்தில் குவியத் தொடங்கினர்.
குப்பைத் தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக வந்த தகவலால் நேற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.