காயம்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காத ஆரம்ப சுகாதார நிலையம்; பொங்கி எழுந்த உறவினர்கள் போராட்டம்...
ஈரோடு
காலில் காயம்பட்டதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காததால் பொங்கி எழுந்த உறவினர்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள புதுசூரிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமியின் மகன் ஐயாசாமி. அவருடைய மகன் மௌலிதரன் (4).
நேற்று காலை, மௌலிதரனை, தாத்தா ராமசாமி அருகே உள்ள கோவிலில் இருந்து சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மௌலிதரனின் கால் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது. இதில் அவன் காலில் இருந்து இரத்தம் வழிந்ததால் வலியால் அலறி துடித்தான்.
உடனே அவனை ராமசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் இணைந்து சிகிச்சைக்காக நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டுச் சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்க துண்டு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நீண்ட நேரமாகியும் அவனை சிகிச்சைக்கு அழைக்கவில்லை.
இதனால் மௌலிதரனின் உறவினர்கள் அவனை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சினம் அடைந்த உறவினர்கள் மௌலிதரனுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள கோபி சாலையில் காலை 10 மணி அளவில் ஒன்று கூடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோபி துணை காவல் கண்காணிப்பாளர் செல்வம், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அங்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, மௌலிதரனின் உறவினர்கள், ‘விபத்தில் காயமடைந்த சிறுவன் மௌலிதரனுக்கு சிகி ச்சை அளிக்க நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் சென்றோம். அங்கு சிகிச்சை அளிக்க சீட்டு வழங்கி வெகு நேரமாக காக்க வைத்தார்கள். ஆனால் சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தோம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளு க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்து, பஞ்சு போன்றவற்றை எங்களையே வாங்கி வர கூறுகிறார் கள். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விளாசினர்.
அதற்கு மருத்துவர்கள், ‘இனிமேல் இதுபோல நடக்காது" என்றும், "நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்’ என்றும் உறுதியளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட மௌலிதரனின் உறவினர்கள் 11 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.