மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆசிரியர் அதிரடி கைது; தலைமை ஆசிரியரும் கைது...
திருநெல்வேலி
திருநெல்வேலியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆசிரியரை காவலாளர்கள் மடக்கிப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர். புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், நெல்லைப் பேட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் ராஜூ (43). இவர் தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டு இந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் அளித்தனர். ஆனால், அந்த புகாருக்கு செவிசாய்க்காத தலைமை ஆசிரியர் ஆசிரியர் ராஜூ மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாணவி ஒருவர் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.
அதன்படி, மாணவிகள் புகார் அளித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளித் தலைமை ஆசிரியர் ஆறுமுகத்தை ஏற்கனவே கைது செய்தனர். ஆசிரியர் ராஜூவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்த ஆசிரியர் ராஜூவை, தென்காசி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரசுவதி தலைமையிலான காவலாளர்கள் மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.