தமிழ் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க கோரி கன்னியாகுமரி முதல் டெல்லி வரை தமிழ் ஊர்திப் பயணம்…
திருச்சி
தமிழ் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி கன்னியாகுமரி முதல் டெல்லி வரை தமிழறிஞர்களின் தமிழ் ஊர்திப் பயணம் நாளை தொடங்குகிறது. அக்டோபர் 22-ஆம் தேதி முடியும் இந்த பயணத்தில் மோடியிடம் கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளனர்.
பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றத்தின் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது:
“தமிழ் மொழிப் பாதுகாப்பு, தமிழர் உரிமைப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி எனது தலைமையில் தமிழறிஞர்களால் கடந்த 1993-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் பரப்புரை ஊர்திப் பயணம் நடைபெற்றது.
தற்போது 25-வது ஆண்டாக கன்னியாகுமரி முதல் டெல்லி வரை முதல் முறையாக தமிழ் ஊர்திப் பயணத்தை வரும் அக்டோபர் 12-ஆம் தேதி (அதாவது நாளை) தொடங்க உள்ளோம்.
இதில், “செம்மொழியாம் தமிழ் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அரசு ஏற்க வேண்டும்.
உலகப் பொதுமறையான திருக்குறளை நாட்டின் தேதிய நூலாக அறிவிக்க வேண்டும்.
இந்தி, சமஸ்கிருத மொழிகளை தமிழகத்தில் புகுத்துவதைக் கைவிட்டு, தமிழுக்குரிய சமத்துவத்தை தர வேண்டும்.
சங்ககால தமிழ்மொழி இலக்கியப் பண்பாட்டுக் கருத்துகளை வட இந்திய மக்களும் அறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் பக்தி இலக்கிய நூல்களை அனைத்து மாநில மக்களும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
மதச்சார்பின்மை போல, மத்திய அரசு மொழிச் சார்பின்மைக் கொள்கையை உருவாக்கி, தமிழ் மொழிக்கு உரிமையை வழங்க வேண்டும்.
உலக ஒருமைப்பாடு உள்ளிட்ட பத்து கொள்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது”
சுமார் 3558 கி.மீ. தூரம் நடைபெற உள்ள இந்த தமிழ் ஊர்திப் பயணத்தில் சுமார் 100 இடங்களில் மேற்கண்ட கொள்கைகளை வலியுறுத்தி தமிழறிஞர்கள் பேச உள்ளனர்.
அக்டோபர் 22-ஆம் தேதி நிறைவடையும் இப்பயணத்தின் முடிவில் மேற்கண்ட கொள்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்க உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.