மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் விஷம் குடித்து தற்கொலை…
விருதுநகர்
விருதுநகரில் உள்ள விடுதி ஒன்றில் மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டம், கட்டையாபுரத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் ஜேசுராஜ் (45). இவருக்கு மனைவியும் மற்றும் 10 வயது பெண் குழந்தையும், 8 வயது ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஜேசுராஜ் வேலைக்குச் சரிவர செல்லாததால் அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் ஒரு வருடத்திற்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டார். இதனால், ஜேசுராஜ் தனியாக வசித்து வந்தார், எப்போதும் மன உளைச்சலுடனே காணப்படுவார் என்று சொல்கிறார்கள்.
இதனிடையே, வேலைக்கு சரிவர போகாததால் கடன் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி உள்ளார் ஜேசுராஜ்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிமை மாலை ஜேசுராஜின் அறைக் கதவை வெகுநேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர், அருப்புக்கோட்டை நகர் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசுராஜ் தங்கியிருந்த அறைக் கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது ஜேசுராஜ் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார்.
அதனையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ளனர்.
மேலும், ஜேசுராஜ், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மனைவி, பிள்ளைகளை பிரிந்த சோகத்தால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.