பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க வீடுகள்தோறும் ஆய்வு; மக்கள் ஒத்துழைப்பு தேவை - ஆட்சியர்...
திண்டுக்கல்
பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க வீடுகள் தோறும் வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் சிறப்பு ஆய்வு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் டி.ஜி. வினய் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, வாக்காளர்களின் குடும்ப விவரங்கள், தொடர்பு விவரம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் ஆகிய அனைத்து விதமான படிவங்கள் பெற்று, கள விசாரணையில் ஈடுபட உள்ளனர்.
மேலும், 2019 ஜனவரி முதல் நாளை தகுதியாகக் கொண்டு எதிர்கால இளம் வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிக்க உள்ளனர்.
செல்லிடப்பேசி பயன்பாட்டின் மூலம் ஒவ்வொரு வீட்டின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை புள்ளி கண்டறிதல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் விவரங்கள் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறும். இந்தப் பணி, நவம்பர் 15-30ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
அதன்படி 15-ஆம் தேதி ஆய்வு தொடங்கப்பட்டு நல்ல முறையில் நடைப்பெற்று வருகிறது. எனவே, ஆய்வுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு துணை புரியவேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.