மாணவர்கள் நன்கு சிந்திக்க கூடியவர்களாகவும், பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் இருக்கணும் - சி.சைலேந்திரபாபு அறிவுரை…
நாமக்கல்
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் நன்கு சிந்திக்க கூடியவர்களாகவும், பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காவல்துறை கூடுதல் தலைவர் சி.சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக “ஐ.ஏ.எஸ் தேர்வுகள் சரியான அணுகுமுறை” என்றத் தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை தாங்கினார். தமிழக இரயில்வே காவல் கூடுதல் டி.ஜி.பி, சி.சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர், “போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வுக்கான முக்கியக் கூறுகளையும், அதன் சிறப்பு அம்சங்களை பற்றியும் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் பாடங்களை படிப்பதோடு அவற்றை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். உலகில் சாதித்தவர்களில் சரித்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை நம் சாதனைகளுக்கு முன்னோடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், நிர்வாக பொறுப்புகளில் கடமையுணர்வு மிகவும் அவசியமானதாகும். அவ்வகையில் மாணவர்களாகிய நீங்கள் நன்கு சிந்திக்க கூடியவர்களாகவும், பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி. பணிகளுக்கு எழுத்துத் தேர்வில் இரண்டு நிலைகளும், பிறகு நேர்காணல் தேர்வும் உண்டு. எழுத்துத் தேர்வில் தற்போதைய நிகழ்வுகள் புவியியல் அமைப்பு, பொருளாதாரம், ஆங்கில புலமை, வரலாற்று நிகழ்வுகள் போன்றவை இடம் பெறும்.
மாணவர்கள் நிறைய புத்தகங்கள் படிப்பதன் மூலம் தனது மொழித் திறனையும் தலைமை பண்பையும் வளர்த்துக் கொள்ள இயலும்.
நம்முடைய தேடல், ஆர்வம், கற்றல் மட்டுமே வெற்றிக்கு வழி வகுக்கும். மேலான நோக்கத்தை நிர்ணயித்து அதனை நோக்கிச் செயல்பட வேண்டும்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கைநடராஜன், இயக்குநர் - சேர்க்கை கே.செந்தில், இயக்குநர் - நிர்வாகம் முனைவர் கே.கே. ராமசாமி, முதன்மையர்கள், துறைத் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.